Tuesday, September 20, 2011

" தொலைக்கப்பட்ட தன்னியல்பு "





நியாயமா..
நியாயமாவென்று
கேள்விகளால் 
வேள்விகள் 
தொடக்கம் என்னுள்.. 

விடையறியும் 
ஆவல் நீள்கிறது.. 
ஆனால் 
எங்கோ சென்று
ஒளிந்துக் கொண்டு 
வேதனை தருகிறது... 

வேதனைகளை 
வெட்டிச் சாய்க்க 
புதிதாக சிரிக்கத் 
துவங்கி இருக்கிறது
மனம்.. 
இல்லை இல்லை
நடிக்கத் துவங்கி இருக்கிறது..
தன்னியல்பு நிலையை 
தொலைத்து விட்டு..

எங்கும் 
இருள் சூழ்ந்த நிலையில் 
வெளிச்சத்தின் 
கோடுகள் 
விரலிடுக்கில் 
நுழைவது போல் 
எங்கிருந்தோ வரும் 
மழைச் சாரலைக் கூட 
தொட்டுப் பார்க்க 
துணிவில்லை இப்போது...

உரசிச் செல்லும் 
தென்றலை தழுவும் 
தைரியமில்லை இப்போது.. 

காலை நேர 
பனித்துளியையும், 
மாலை நேர 
மஞ்சள் வானத்தையும் - அதன் 
நிர்மலமான நீல நிறத்தையும் 
ரசித்துப் பார்க்க 
மனமில்லை இப்போது...


" கருணைக் கொலை.. "








சேர்த்திருப்பாயா.. நீ ??
சேர வேண்டிய 
அனைத்தையும்
சேர்த்திருப்பாயா...??

கடவுளிடம் 
கருனை கேள்
நீ இதை செய்
அதற்காக 
நான் அதை 
ஈடு செய்கிறேன் - என்று
வியாபாரம் செய்யாதே..

கடன் கொண்டு
சுமை ஏற்காதே..
முற்பிறவியின்
தீரா சுமைக்காக தானே
இம் மனிதப் பிறவி..

இப்பிறவியிலும்
தொடரும் 
உன்னை
இறைவனாலவது
செய்ய முடியுமா

ஒரு
"கருணைக் கொலை..!"



Monday, September 19, 2011

" கொள் அல்லது கொல் "





எனை ஆட்கொண்ட இறைவா
உன் சம்மதத்தில் தானே
அனைத்தும் ..

மடியும் உயிரும்
உருகும் மெழுகாகி
சிந்தை சிதைந்து நிற்கிறது
நிந்தனை செய்யும் எண்ணங்களால்..

மன்னிக்கவியலா மனிதர்கள்
நிறைந்த இவ்வுலகில்
வேண்டாமெனக்கு 
பிறவியொன்றொன்று..

தயை செய்து - இப்போதே
என்னை கொள்
அல்லது கொல்..





காதலை 
பற்றி மட்டும் 
இனி எழுத கூடாது
என முடிவெடுத்த
நிமிடம்..

விரல் வழியில்
கசியும் வார்த்தைகள்
வேலை நிறுத்தம்
செய்தன..

நிரந்தர மற்ற நிலையில்
நிறுத்தம் செய்யும்
வார்த்தைகளை
பற்றிய சிந்தனையை
எண்ணித் தவிக்கையில்

மீண்டும் 
பற்றிக் கொண்டது 
எண்ணத்தில் - காதல்

எனை 
பற்றிக் கொன்றது..


Wednesday, September 14, 2011

நீ என் " மழையானவன் .. !"



உன்
மின்னல் சிரிப்பில்
நெட்டித் தள்ளி
என்னுயிர்
சிதறச் செய்யும்
என் ப்ரிய
மழை துளி நீ..

நகர்ந்து செல்லும்
கார்மேகத்தின்
சாரலாகி
பூந்தூறலாகி
பெருமழையாகிறாய்
உன் காதலில்..

அடை மழையாய் 
சில நேரம்..
ஆரவாரமற்று 
சில நேரம்..
ஆர்பாட்டங்களோடு
பல நேரமுமென
கனமழையாகிறாய் 
என் இதயம் 
நனைத்து 
வாசம் வீசுகிறாய்..

மழை தேடி
தவித்திருக்கும்
நிலம் போல
உனை தேடி 
காத்திருக்கிறேன்
பல நேரங்களில்
நான்..

மழை நின்ற பின்பான
மண் வாசம்..
நாசி துளைத்து
உள் நுழைந்து
இதயம் வருடி
மூளையை எட்டும்..!

முதுகுத் தண்டில்
மின்னல் வெட்டி..
மின்சாரம் பாய்ந்து
மென் இதயம் கிழித்து
குருதி புசித்து
என் உள்ளம் எட்டும்
உன் காதல் வாசம்..!

இப்போதாவது
புரிந்து கொள்.. 

நீ என் 
" மழையானவன் "


Tuesday, August 23, 2011

" எனது முதல் கவிதை... "





மழை கால மேகமே 
என் நெஞ்சில் 
தூறலாய் வந்து
வெள்ளமானாயே..

குளிர் கால தென்றலே
என் இதயத்தில் 
காற்றாய் நுழைந்து 
புயலானாயே..

மார்கழி மாத பனியே
காலைக் கதிரவனால் 
உருகினாலும்
நிறைந்த குளிராய் 
என் மனதில் நீ..!


( "கவிதைகளோடு கரம் பிடிக்க தொடங்கிய நாளில் என் முதல் கிறுக்கல்...." )



Saturday, August 20, 2011

" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... "




அம்மா..
அமைதியின் 
போர்வைக்குள் ஒளிரும் 
அன்பின் விலாசம் நீ..

எவ்வளவோ 
எழுதியிருக்கிறேன்
ஆனால்
இன்று வரை
எழுதியதில்லை 
உன்னைப் பற்றி
எதுவும்..

உன்னில் 
கருவாகி உருவாகி
உனதுதிரத்தால் 
உயிர் சுமந்து
இப்படி 
பிரிந்து நிற்பேன்
என்றறிந்திருந்தால்
பிறவாமலே 
இருந்திருப்பேன்..

நான் 
துயில் துறந்து 
விழிக்கும் 
ஒவ்வொரு நாளிலும்
என் முன் நிற்பாயே..
இப்போது 
உனை 
பாராமல் இருக்கிறேன்
நிதமும்..

சிறுவயதின் அழுகையில்
ஏனென்று கேளாமலே
அரவணைத்து
எனதழுகை நிறுத்துவாயே..
இப்போது 
மௌனமாக 
மனதிற்குள் அழுகிறேன் 
உன் அரவணைக்கும் 
கைகளை தேடுகிறேன்..
.
மழலையில்
வார்த்தைகள் 
புரியாத போதும்
நீ மட்டும் புரிந்ததாய்
தலை சரித்து 
சிரித்துக் கொஞ்சுவாயே..
இப்போது 
பேசுவதற்கு கூட 
வார்த்தகள் தேடுகிறேன்.. 
.
தோளில் சாய்த்து 
நான் கண்ணுறங்க 
நீ விழித்திருப்பாயே..
இப்போது நாட்கள் கடந்து
தூக்கம் மறந்து நிற்கிறேன்..

என் பசியறிந்து
பசியாற்றிய காலங்கள்
நீ பசிமறந்து நின்ற 
நினைவுகளை
நிறுத்துகிறது நெஞ்சில்..
இப்போது
என் பசி மந்தித்து
வெகு நாட்களாக
இருந்தும் 
இல்லாதிருக்கிறேன்..

தவறு செய்தால் 
தண்டிப்பாயே..
உன்னை 
நிராகரித்துச் சென்ற எனக்கு
என்ன தண்டனை
கொடுக்கப் போகிறாய் 
அம்மா..??

உன்னை 
விட்டுச் சென்ற நாளில் 
நீ எவ்வாறெல்லாம் 
பதறினாயோ...

எனக்கு
இப்போது புரிகிறதம்மா
நிராகரிப்பின் 
வலியும் வேதனையும்..

மீண்டும்
என் தலை கோதி 
என்னை அரவணைப்பாயா..
உன் மடியில் குழந்தையாவேனா 
அம்மா..??


நன்றி,
நட்புடன் சௌம்யா...