Wednesday, August 29, 2012







காற்றில்
சிலிர்த்தெழுந்த
நிலத்தின்
மேற்பரப்பில்
சில்லிட்டமர்ந்தது
மழைத்துளியொன்று

தலையசைத்தபடி
உற்சாகமாகியது
நிழலடர்ந்த
தெருவோர மரங்கள்..


-நன்றி,

 நட்புடன் சௌம்யா..




Tuesday, August 28, 2012

மழையுதிரும் இவ்விரவினில்...



எல்லோரும் 
குடைபிடித்ததொரு
தருணத்தில் 
உன் நினைவோடு 
நடக்கத் துவங்குகிறேன்..

தூரத்தே கேட்கும்
அவ்விடியின் சப்தம்
உன் குரலொட்டி
ரீங்கரித்து
சப்தங்கள் 
சலனப்படுத்துவதை
உணர்த்தியது..

உன்னைத் தெளிந்த நாளில்
உன் மீதங்களேதுமில்லாமல்
விலக்கப்பட்டு விட்டதாக
நினைத்ததொரு பொழுதினில்
உள்ளிருந்து வெளி எட்டிப் பார்த்தது
மீதமாக நின்ற இக் காதல்..

வேர்களின் நுனியை 
காண்பதறியாத 
அத்தனை ஆழமாய் 
என்னுள் படர்ந்துவிட்ட உன்னை
களைத்தெறிய வழியேதுமுண்டோ
என எண்ணித் தவிக்கிறேன்..

உள்ளம் அழுகையிலும்
இதழோரம் குறுநகையூட்டும்
இம்மழையின் துளியில் 
உன் மீதங்களை 
வரைந்தனுப்புகிறேன்
வேறெவளேனும்
பிழைத்துக் கொள்ளட்டுமென்று..

மழையுதிரும் இவ்விரவில்
அருகில் யாருமில்லையெனினும்
மழை துடைத்தெறிகிறது
வழிந்தோடும் கண்ணீரை..


- நன்றி,
   நட்புடன் சௌம்யா..



Monday, August 27, 2012



இத்
தேனீர்
கோப்பை 
நிரப்பிக் 
கொண்டிருக்கிறது
நம் ஊடல் 
தருணங்களை..
அருகமர்ந்து 
ஆறுதலாகிறேன் 
உன் நினைவின் 
மிச்சங்களுடன்..!