Wednesday, August 29, 2012







காற்றில்
சிலிர்த்தெழுந்த
நிலத்தின்
மேற்பரப்பில்
சில்லிட்டமர்ந்தது
மழைத்துளியொன்று

தலையசைத்தபடி
உற்சாகமாகியது
நிழலடர்ந்த
தெருவோர மரங்கள்..


-நன்றி,

 நட்புடன் சௌம்யா..




Tuesday, August 28, 2012

மழையுதிரும் இவ்விரவினில்...



எல்லோரும் 
குடைபிடித்ததொரு
தருணத்தில் 
உன் நினைவோடு 
நடக்கத் துவங்குகிறேன்..

தூரத்தே கேட்கும்
அவ்விடியின் சப்தம்
உன் குரலொட்டி
ரீங்கரித்து
சப்தங்கள் 
சலனப்படுத்துவதை
உணர்த்தியது..

உன்னைத் தெளிந்த நாளில்
உன் மீதங்களேதுமில்லாமல்
விலக்கப்பட்டு விட்டதாக
நினைத்ததொரு பொழுதினில்
உள்ளிருந்து வெளி எட்டிப் பார்த்தது
மீதமாக நின்ற இக் காதல்..

வேர்களின் நுனியை 
காண்பதறியாத 
அத்தனை ஆழமாய் 
என்னுள் படர்ந்துவிட்ட உன்னை
களைத்தெறிய வழியேதுமுண்டோ
என எண்ணித் தவிக்கிறேன்..

உள்ளம் அழுகையிலும்
இதழோரம் குறுநகையூட்டும்
இம்மழையின் துளியில் 
உன் மீதங்களை 
வரைந்தனுப்புகிறேன்
வேறெவளேனும்
பிழைத்துக் கொள்ளட்டுமென்று..

மழையுதிரும் இவ்விரவில்
அருகில் யாருமில்லையெனினும்
மழை துடைத்தெறிகிறது
வழிந்தோடும் கண்ணீரை..


- நன்றி,
   நட்புடன் சௌம்யா..



Monday, August 27, 2012



இத்
தேனீர்
கோப்பை 
நிரப்பிக் 
கொண்டிருக்கிறது
நம் ஊடல் 
தருணங்களை..
அருகமர்ந்து 
ஆறுதலாகிறேன் 
உன் நினைவின் 
மிச்சங்களுடன்..!



Wednesday, February 15, 2012





நிழலை 
நம்பும் மனம்
நிஜத்தை 
மறுக்கிறது..

கண் விழிக்கும் 
போதெல்லாம்
கரைந்து
போனதுன் கனவு..

மீண்டும்
இமை மூடிக் கொள்கிறேன்
நிஜத்தை கொல்கிறேன்..





என்
ஆசைகளை 
ஆடையாக்கிக்
கொண்ட 
என் கனவுகளின்
நாயகன் நீ..

என் 
விழி இமைக்கும்
பொழுதினில்
மனதினுள் நுழைந்து
மதி மறக்கச் செய்யும்
குறும்பு நீ..

வம்புகள் செய்தே
என் நேரங்களை
களவாடும் 
திருடன் நீ..







எதிர்பார்ப்புகளை
விட்டொழித்தால் 
ஏமாற்றம் தடைபடும்
அதீதமான
எதிர்பார்ப்புகள் தான்
மிதமிஞ்சிய ஏமாற்றத்தை  
தருகிறதாம்..

ம்ம்ம்ம்..
உண்மை தான்
உன் மீதான என்
எதிர் பார்ப்புகளை
விட்டுவிட்டேனென்று
சொல்லியே
ஏமாற்றிக் கொள்கிறேன்
என்னை நானே
ஒவ்வொரு நொடியிலும்..!



Thursday, October 27, 2011

"காதலும் காதல் நிமித்தமும்.. " 2



நீ 
கடந்து 
செல்லும் 
போது 
சாலையோர 
மரங்கள்
எல்லாம்
சோலையோர 
மரங்களாகி 
விடுகின்றன...



என்னிதயத்தை
தகர்ப்பதற்கென்றே
இறைவன்
படைத்த
அதி அற்புதமான
ஆயுதம்
உன்
சிரிப்பு...