Wednesday, June 19, 2013

மழையுதிர்காலம்...






வெளிர் வானம் இருள் போர்த்திய நிலையில்
இடி மின்னலென நாடக ஒத்திகை ஒன்றை 
மேகங்கள் நடத்திக் கொண்டிருக்க 
வர்ணமிழைக்கும் வானவில்லொன்று
பூமியை வெறித்துக் கொண்டிருந்த வேளையில்
இலையுதிர்க்கும் மரங்களெல்லாம்
மழையுதிர்க்கத் துவங்கின..



Wednesday, November 7, 2012

இன்னும் சில விநாடிகளில்...










சற்றேரக்குறைய 
இன்னும் சில நிமிடங்களில் 
நான் செத்துப் போகலாம்..
ஒரு மிருகம் இரை திண்பதைப் போல்
வெகு வேகமாக
எனைத் திண்றுக் கொண்டிருக்கிறது 
விலா வலிக்கச் சிரிக்கும் 
அவனின் சம்பாஷனைகள்..
சுய பிரக்ஞையற்றுக் கிடக்கும் பொழுதொன்றில் 
உருவமறியா பட்சினியொன்று 
எனை உற்று நோக்கி 
பரிதாபத்தோடு சிகை தாழ்த்தும் 
அக்கணத்தின் முடிவில் 
எனக்கான புதிய வாசஸ்தலம் ஒன்று 
கண்டறியப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.. 

ஆம்.. 
இன்னும் சில வினாடிகளில்
நான் செத்து விடலாம்..

எவர் அறியக் கூடும்?? 

நெஞ்சழுத்தும் இவ்வலியோடு 
அடர் வனமொன்றில் 
குடை விரித்தாடும் 
மரக்கிளையின் முகப்பொன்றில் 
பட்டும் படாமல் அமர்ந்திருக்கும் 
அச்சிறு பறவை 
நானாகவும் இருக்கக் கூடும்...


Sunday, October 14, 2012

தேவதை கானம்...




தனக்கே
உரித்தான ஒலியில்
ஓரழகிய பாடலோடு
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
அக் கைபேசி..

அப்பாடலின்
ஒற்றை நுனியை
பற்றியவாரே
அதன் பல்லவியின்
குறுக்கிலும்
நெடுக்கிலும்
மிதக்கத் தொடங்கினேன்

அதன் சரணத்தில்
என்னுயிர் கரைந்து
சட்டென்றொரு
பறவையாகி
வானில் பறக்கிறேன்

நிலவினருகில்
இளைப்பாருகிறேன்

நட்சத்திரங்களில்
உல்லாசமாய்
ஊஞ்சலாடுகிறேன்..

அப்பாடலின்
கடைசி ஆலாபனையில்
அருகிருந்த
மேகத்திற்குள்
தவறி விழுந்தேன்

அதில்
ஒளிந்திருந்த
மழை
பூக்களை
தூவியது..

அப்பாடலின்
முடிவில்
நானொரு
தேவதையாகித்
திரும்பினேன்
என்னிடத்திற்கு..

இப்போது
எனதிறகுகள்
அதன்
வரிகளை
எழுதத் தொடங்கின
எனக்குள்..



Friday, October 12, 2012

மரணாவஸ்தை கொண்ட ஆகப் பெருந்துயரென்பது...







யாரென்றறியாத அவ்விருவரும்
எவர் போலவுமில்லை..
யாரிருக்க முடியும் அவர்களைப் போல..?
தெய்வாம்சப் பெண் அவள்
அவனோ ஷத்ரிய வம்சத்தவன்
அவனைப் பார்க்கும்போதெல்லாம்
உள்ளங்கையாள் வதனத்தை மூடுகிறாளெனில்
அது வெட்கமல்ல; பெருந்துயரொன்றின் கேவல்
அவளைவிட அதிதுயரம் சுமக்கிறான் அவன்.
காலம் தம் இதயத்தின்
வலதறையில் அவளை
இடதறையில் அவனை
நிரப்பிக்கொண்டு காளிங்க நர்த்தனம் ஆடுகிறது.
காலத்தைக் குற்றம் சொல்லும் பாவம்
அவர்களுக்குள்ளும் இருக்கிறது.
காலம் குற்றம் செய்ததாகினும்
தவறொன்றும் இழைக்காததாகினும்
ஏதொன்றையோ செய்து
இருவரையும் தண்டனைக்குப் பணித்து
நேசச் சிலுவை சுமக்கச் செய்திருக்கிறது.
பிறிதொரு பிறவியின் வரவேற்பறையில்
காத்துக் கொண்டிருக்கலாம் இந்நேசம்
ஒருவேளை கதறிக்கொண்டுமிருக்கலாம்..





Sunday, September 9, 2012




கண்ணீரின் 

வெப்பத்தை

தண்ணீரில் கரைக்கும்

மழையாகிப் 

போகிறேன் 

உன்னைப் பற்றி

கவிதை எழுதும் 

கணமொன்றில்...










உன் பெயரை 
சொல்லும்
துளிகளினூடே
மழையின்
மிச்சத்தோடு
மிதந்தலைகிறேன் - நான்
நிச்சயமாக
நிரப்பிக் கொண்டிருக்கும்
அவற்றுள்
ஏதேனுமோர் துளி
உன் சாயலை..!





Wednesday, August 29, 2012







காற்றில்
சிலிர்த்தெழுந்த
நிலத்தின்
மேற்பரப்பில்
சில்லிட்டமர்ந்தது
மழைத்துளியொன்று

தலையசைத்தபடி
உற்சாகமாகியது
நிழலடர்ந்த
தெருவோர மரங்கள்..


-நன்றி,

 நட்புடன் சௌம்யா..