Thursday, August 18, 2011

" யாரோ ஒருத்தியின் காதல் குறிப்பு..." - 2...


அபூர்வமாய் கிடைப்பதில் ஆர்வம் மிகுவது சகஜம் தானே... 
ஆம் இது அபூர்வமாய் வாய்த்ததொரு காதல்..
நான் ஆசையுடன் பயணிக்கிறேன் மீண்டும் அந்த காதல் மழை காலத்தில்...

MAY 6...
என் மனதில் கருத்தரித்த உன் நினைவுகளை எல்லாம் குழந்தையாக பெற்றெடுக்கிறதடா என் வார்த்தைகள்..

கூண்டுப் பறவையின் கதவுகளை திறந்து சிதறடிக்கும் கனவுகளில் சிறகடிக்கச் செய்தவன் நீ..
நட்பு காதலாகாது என்றேன்
காதல் இல்லாத நட்பும் நட்பாகாது என்றாய் நீ..
நண்பர்களுக்குள் காதல் வந்தால் நட்பு கருகி விடும் என்றேன் நான்..?!

" காதலித்தால் நட்பு சாகுமா..??? 
அடி என் முட்டாள் பெண்ணே...
 நான் இறக்கும் வரை நட்போடு இருக்கத்தான் உன்னை காதலிக்கிறேன் உணர்ந்து கொள்.. " என்றாய் நீ..

" யாரிடம் வேண்டுமானாலும் நட்பு கொள்ளலாம் ஆனால் உன்னிடம் மட்டும் தானடி என்னால் காதல் கொள்ள முடியும்" என்றாய் நீ...

நீ வார்த்தைகளால் வாதாடி இருந்தால் விட்டிருக்க மாட்டேன் நான்,  இப்படி காதலால் வாதிட்டு விட்டாயே..!
என்ன செய்வேன் நான்..?!

MAY 18..
இதுவரை நீ என்னிடம் பேசியதிலேயே அழகான வார்த்தை எது தெரியுமா..? 
" உன் காதலை கொஞ்சமாவாவது எனக்கு கொடு "  என்றாயே இது தான்..

உன்னைக் கண்டு நான் உருகிய நாளில் காதலே என் ஸ்வாசமாகி போனதடா..
உன் அன்பை பொழிந்த மழையில் காதல் பிடிக்காத என்னையும் உயிர் நனைய வைத்தாயடா..

எல்லா நேரங்களிலும் நீ என்னுடன் பேசியதில்லை... 
ஆனால் நீ பேசாத நேரங்களில் எல்லாம் உன் நினைவுகள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும் என் மனதோடு....

எல்லாவற்றை பற்றியும் ஏதேனும் பேசிவிடுவாய் இயல்பான ரசனையுடன்..!
எந்த ஒரு விஷயமும் உன்னை நினைவு படுத்தும் சக்தி கொண்டதாக தான் இருக்கிறது..
உன்னை மறக்கும் சக்தியை இழந்து விட்டு நிற்கிறது என்னுடன் சேர்த்து எல்லாமும்...

MAY 25...
பார்வையில் இருந்து விலகத் தொடங்கும் எல்லாவற்றிலிருத்தும் தொடங்கி விடுகிறது ஏதேனும் ஒன்று உன்னைப் பற்றி..
என்ன செய்வேனடா நான்..?

உன்னை " தென்றல் "
என்றே தான்
எண்ணியிருந்தேன்..
ஆனால்
என்னை ஆட்கொண்ட பின்னர் தான்
" புயல் "
என்பதை உணர்ந்தேனடா..!

நீ என்னை..
" டா " என சொல்லும் போதும்
" டீ " என கூப்பிடும் போதும்
" ஒன்னு குடுடீ " என கெஞ்சும் போதும்
" தங்கம் " என கொஞ்சும் போதும்
"கண்ணம்மா " என எனை திணர வைத்த போதும்
உன்னிடம் மயங்கினேனடா
மீண்டும் மீண்டும்..!
நீ இல்லாத நேரங்களில் எல்லாமும் என்னை உன் நினைவுகளாலேயே
கட்டி வைத்து வதைக்கிறாயடா..

பல வித்தைகள் கற்றிருப்பதாக கூறுவாயே..
அதில்
உன் மௌன வித்தை மட்டும் 
என் இதயத்திற்கு கற்றுக் கொடு..
கட்டுக்கடங்காமல் சதா உன் நினைவிலேயே
இருக்கிறது..
உன்னை மறக்கும் வழிதான் தெரியவில்லையடா..

JUNE 6
நனவுகளில் நிறையாமல் 
கனவுகளிலும் கலையாமல் 
என் நினைவுகளை மொத்தமாக களவாடிச் சென்ற என் நினைவுத் திருடனே...

நீயும் நானும் காதலிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்து தான் கட்டவிழ்க்கப்பட்டன என் கனவுகள்..

என் சம்மதம் கேளாமல்
என்னை அருகில் இழுத்து
சட்டென்று அளித்தாய் முத்தத்தை..
முத்தங்களால் கைது செய்து 
முத்தங்களால் என்னை கொன்ற மொத்தக் கொலைகாரனடா நீ..! 
வேண்டாம் என் நானும் 
வேணும் என் நீயும்
சண்டையிட்டுக் கொண்டும் 
முகம் திருப்பிக் கொண்டும்
அருகருகே அமர்ந்து கொண்டும்
உன் தோள் மீது சாய்ந்து கொண்டும்
பகலில் நனவாகவும் 
இரவினில் கனவாகவும்...
மொத்தத்தில் உன் நினைவுகள் அனைத்தும் என் நடு நிசியின் பசியாகிப் போனதடா....!

JUNE 27...
ஆயிரம் வேலைகள் இருந்தாலும், உன்னைப் பற்றி நினைக்கும் இதமான வேலையையும் நொடி தவறாது செய்கிறதடா பேதை மனது..
வேண்டாம் என்றாலும் விடாமல் உன் நினைவுகளிலேயே சுற்றித் திரிகிறது இந்த பைத்தியகார மனது...!!

என் கனவுகள் அனைத்தையும் நிஜமாக்கித் தந்தவன் நீ
இப்போது நிஜமான அனைத்தையும் நினைவாக்கித் தந்தவனும் நீயே தானடா..!

நான் கேட்காமலேயே அழகாய் கொடுத்தாய் உன் அன்பினை
ஆனால் அவ்வளவு கெஞ்சியும் கொஞ்சமும் தள்ளிப் போட முடியவில்லை நம் பிரிவுகளை.. 

JULY 7...
நினைக்க நினைக்க திகட்டாமல் இனித்துக் கொண்டே இருக்கிறதடா இன்னமும் நம் காதல் காலம்..

உன் காதல் எப்போதும் தாராளம்..
உன்னிடம் நான் வியந்தது ஏராளம்... 
எப்படித் தான் சாத்தியமானதோ உனக்கு மட்டும் எல்லாமும்..!!

எனக்குள் ஒளிந்திருந்த என்னை
நானே அறியாமல் வெளி கொணர்ந்து
என்னை என்னிடமே அறிமுகம் செய்து வைத்தாய்..!

என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த என்னை
என்னை மறந்து உன்னை பற்றி மட்டுமே சிந்திக்க செய்தாய்..!

என் கைபிடித்து ஏதோ ஒரு ரேகையை பார்த்து " இது தான் நான் "  என்று சொல்லி அதையே என் ஆயுளின் ரேகையாக்கினாய்..!

உன்னைக் காணாத பொழுதுகளில் எல்லாம் நகரமறுத்த நேரங்களை
உன்னை பார்த்த உடன் நில்லாமல் ஓடிவிடச் செய்தாய்..!

உன்னுடன் பேசி சிரித்த சில நாட்களுக்குள்
நீ பேசாது போகும் நிமிடங்களுக்காய் கண்ணீர் ததும்பக் கற்றுத் தந்தாய்..!

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பாஷைகள் தந்தாய்..!
பக்கம் வந்தே தொட்டு பேசினாய்..!
மெல்ல அருகினில் வந்து முத்தமும் தந்தாய்..!
மொத்தத்தில் என் கனவுகள் அனைத்தையும் களவாடிவிட்டாயடா...

JULY 19...
பகலெல்லாம் பதுங்கியிருக்கும் வெண்மதி
அந்தி மாலையின் அழகிய ஆரம்பத்தில் முட்டி மோதி வந்து விடுவது போல.. 
உறக்கம் நெருங்கும் நேரங்களில் எல்லாம் விழிகளில் நிறைந்து விடுகிறதடா உன் நினைவுகள்..!

நீ செல்லமாய் சீண்டும் நேரங்களில் எல்லாம்
மெல்லமாய் எட்டிப் பார்த்ததடா என் காதல்..!

" என் மிகப் பிடித்த திருப்பம் நீ...." 
உன்னை என் இதயத்தினால் ரசிக்கத் துவங்கி விட்டேன்
அதனால் தான் நீ இனிக்கிறாயடா..!

நீ புன்னகைகும் ஒவ்வொரு முறையுமே ஏதேனும் ஒன்றை தவற விட்டு இருக்கிறேன்
ஆனாலும் அதில் அதிகமாக தவறியதென்னவோ நானாக தான் இருந்திருக்கிறேன்..!

என்ன மந்திரம் தான் ஒளித்து வைத்திருந்தாயோ உன் குரலில்..??
நீ பேசும்போதெல்லாம் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல
உன் குரலுக்கு கட்டுப்பட்டு ஊமையாகிப் போனதடா என் வார்த்தைகள்..?!

என்னை ஈர்பதற்காக நீ எதுவுமே செய்யவில்லை 
எப்படி உன்னை காதலித்து தொலைத்தேனோ..? என்று யோசித்தேன்,
ஆனாலும் அதுவே தான் என்னை ஈர்த்தது.. 
உன் அழகே, அழகான உன் காதல் தான் தெரியுமா..??

எதையாவது பேசி கொண்டிருக்கும் போதே ஆரம்பித்துவிடுவாய் முத்தம் பற்றியும்..
" உனக்கு இது தவிர எதுவும் தெரியாதா டா??"  என்றால் 
"இதை விட உன்னதமான விஷயம் வேறு என்ன இருக்கு"  என்று பதில் கேள்வியும் வைத்திருப்பாய்..

உன் திமிரை கூட ரசிக்கத்தான் தோன்றியது எனக்கு.. 
" ஒரு முத்தம் குடுடீ" என்று அதிகாரமாய் கேட்ட போது..!

ஒரே ஒரு முத்தத்தினால் உன் காதல் அனைத்தையும் உணர்த்தி என்னை மூர்ச்சையாக்கி விட்டு
பின்னும் தொடங்கினாய் மறு முத்தத்தால் முதலுதவியையும்...
நீ முத்தமிட்ட நாட்கள் எல்லாம் சிவந்து கிடக்கிறதடா இன்னமும் என் நாட்குறிப்பேட்டில்..

JULY 30...
நீ செய்யும் வன்முறைகளை ரசித்துக் கொண்டே உன்னிடம் தோற்றவளடா நான்..
எபோதும் என் நினைவுகளோடு விளையாடும் தீராத விளையாட்டு பிள்ளையடா நீ..

என்ன செய்வானோ என்ற குழப்பமான பயத்தில் பரிதவித்த என் விழிகளின் பதிலாக மென்மையாக அணைத்து.. இனிக்க இனிக்க நீ அளித்த முத்தத்தில் நிறைந்திருக்கிறதடா என் நினைவுகள்..

இன்றும் நன்றாக நினைவிருக்கிறது...
முதல் நாள் சந்திப்பில் மின்னலாய் உரசிச் சென்று என் உள்ளம் துளைத்தது உன் பார்வை... 
என் இமைகள் இமைக்க மறந்ததால் 
சிந்திக்க மறுத்தது என் எண்ணங்கள்.. 
அந்தி மாலையும், அதன் பிறகான இரவும்
கொட்டிக் கிடந்தது நம்மோடு அடர்ந்த தனிமை.. 
பாஷை மறந்து மௌனங்களில் கரைந்தேன்
வார்த்தைகள் தொலைத்தேன்
ஆரம்பமானது விழிகளின் தேடல்
ஏக்கமான உணர்வுகளோடு துவங்கிவிட்டாய் நீ
துவள்கிறது எல்லாமும்
காற்றில் பரவியது வெப்பமான மூச்சுக் காற்று
எச்சில் பட ஏக்கமானது உதடுகள்
அணைத்தாலும் அணையாத தீ
தீண்டத் தீண்டத் தூண்டப்பட்டது.. 
ஆரத் தழுவிய ஆசை நிமிடங்களோடு
கரமிரண்டும் கோர்த்துக் கொண்டது காதலை
நம் தனிமையின் நிசப்தங்களில் 
உதடுகள் முணுமுணுக்கும் உச்சரிப்பில்
சிக்கித் தவித்தது உன் பெயர்..
வீசும் காற்றினில் இலைகள் பேசும் ரகசியமாய்
உன் காதில் மட்டுமே ஒலித்தது என் ரகசிய சிணுங்கல்கள்...
குளிர் தழுவும் மார்கழி போல எனை தழுவி நிற்கிறதடா உனது நினைவுகள் அனைத்தும்..!

மேல் நோக்கி விசிறப்படும் எல்லா பொருட்களும் பூமிக்கே திரும்பிவிடுவது புவி ஈர்ப்பு விசை...
விலகிச் சென்றும் விஸ்வரூபமாகும் உன் நினைவுகள் என்ன ஈர்ப்பு விசை..??

AUGUST 17...
எப்போதும் சொல்வாய் " என்னை மாதிரி யாரலையும் பேச முடியாது " என்று
ஆமாம் .. உன்னை மாதிரி யாராலும் பேசவும் முடியாது.. 
உன்னை போல இருக்கவும் முடியாது..

மழை நின்ற பின்பான மண் வாசம் என்பது 
நாசி துளைத்து
உள் நுழைந்து
இதயம் வருடி
மூளையை எட்டும்..
அது போல தான் 
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டி 
மின்சாரம் பாய்ந்து
குருதி புசித்து 
இதயம் கிழித்து
என் உள்ளம் எட்டியது உன் காதல் வாசம்..!

AUGUST 30..
என் ப்ரியமானவனே..
கொஞ்சிக் கொஞ்சியே என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றவனடா நீ..

ஒரு நிமிடத்தில் கனவுகள் கொடுத்து
மறு நிமிடத்தில் அதை அழகாக அழிக்கவும் தெரிந்த கை தேர்ந்த வித்தைகாரனடா நீ.

நீ என்னை விட்டு பிரிந்து செல்லும் தருணங்களில் எல்லாம்
எதையெல்லாமோ சொல்ல நினைத்து வார்த்தைகள் வரமறுத்து தவித்திருக்கிறேன்.. 
போட்டி போடும் என் விழிமழையின் துணையோடு..!
ஆனாலும்..
என்னால் சொல்ல இயலாததை எல்லாமும்என் இதழ்களாவது சொல்லிவிடும் என்ற நம்பிக்கையோடு தான் ஒவ்வொரு பிரிவிலும் முத்தமிட்டே அனுப்பினேன் உன்னை..

SEPTEMBER 9..
மௌனமாக இருந்த என் சில நிமிடங்களை கூட மொழிபெயர்த்தவன் நீ..
என்னுள் இருக்கும் உன்னை காண்பதற்காக காத்திருக்கின்றன என் தேடல் காலங்கள்..

உரக்கத்தில் புரண்டு படுக்கும் உனது தலை கோதுவதற்காய் காத்திருக்கின்றன என் காலை வேளைகள்..

உன் தோள் மீது என் தலை சாய்தலுக்காக தேக்கி வைத்திருக்கிறேன் என் நிமிடங்களை..

நம் ஈரைவிரல் தீண்டி நடக்கும் நேரங்களுக்காய் காத்திருக்கின்றன என் இனிமையான பொழுதுகள்..

உன்னோடு என் இதழ் உரையாடும் தருணங்களுக்காய் பதுக்கி வைத்திருக்கிறேன் என் வார்த்தைகளை..

உன் இதழின் உன்னத ஸ்பரிசத்திற்காக சேமித்து வைத்திருக்கிறேன் என் காதலை எல்லாம்.. 

உன் இதயத்தில் என் துளாவலும்
என் இதயத்தில் உன் அலாவலும் வேண்டுமடா நித்தமும்...

யாரேனும் சொல்லிக் கொடுத்தா ஸ்வாசிக்கிறோம் அதுபோல தானே அன்பும் 
" சொல்லி வருவதும் இல்லை... 
சொல்லி தருவதும் இல்லை... "
உன் மீதான அன்பும் அப்படித்தான்.. 
" நீ சொல்லி வந்ததுமில்லை.. 
நீ சொல்லி தந்ததும் இல்லை.. "
என்றேனும் உணர்ந்து கொள்வாயா என் செல்ல காதலா..??

SEPTEMBER  20...
உன்னால் மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள் என்னை எப்போதெல்லாம் அறுவை சிகிச்சை செய்தாலும்...
மறைத்து வைக்கப்பட்ட உன் நினைவுகள் மட்டுமே அத்தனைக்கும் மருந்தாகிப் போகிறதடா..

என்னை உன் நெஞ்சோடு சேர்த்தணைத்த போது 
உன்னை என் தாயாகவே உணர்ந்தேன் நான்..!

நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக 
எனக்குள்ளே "காதல்" ..
இங்கு காதல் கெஞ்சியது
கொஞ்சியது..
சிணுங்கியது..
மிஞ்சியது..
வெட்கப்பட்டது.. 
ஆனால் காலத்தின் சதியோ அன்றி என் விதியோ
என் காதல் இன்றும் மிச்சப்பட்டே நிற்கிறதடா..
திரும்பிப் பார்க்குமா மற்றொரு காதல் காலம்...???

 கடற்கரையின் ஈர மணலில் 
என் பெயர் எழுதச் சொன்னாய்...
ஆனால் அப்போது கேட்கத் தோன்றவில்லை
" உன் இதயத்தில் எழுதியிருக்கிறாயா நீ..? " 
என்று..

OCTOBER 2..
"வாழ்வின் அர்த்தம்"
எப்படி யோசித்தாலும் அது 
"உனக்குள் தான் "என்றே 
முற்றுப்புள்ளி வைக்கிறது என் ஊமை மனது...
ஆம் நீயின்றி எப்படி என் வாழ்வு மட்டும் அர்த்தமுள்ளதாகும்..??

நீ என் முதல் காதல்
நீ என் முதல் முத்தம்
நீ என் உயிரின் யுத்தம்
நீ என் சுமுகமான வலி
நீ என் முடிவான தொடக்கம்
நீ என்னுள் மூண்ட தீ.. 
ஆனாலும் என்றும் விலகாத பணி..
எனக்கே எனக்கான ரகசிய வலியாய் நம் "காதல்"
மரணம் என்னை மொத்தமாய் திண்ற பின் 
என் கல்லறையின் கடைசி கல்வெட்டில் 
நான் பதியப் போகும் ரகசிய வாக்கு மூலம் நீ...!!

OCTOBER 17..
ஆயிரம் கேள்விகளோடு 
உன்னை சுற்றி
சுழன்றுக்கொண்டிருக்கிறது
என் காதல்...
ஆனால் இப்போதெல்லாம்
உன் வார்த்தைகளில் 
ஒன்று கூட எனக்கானதாய் இல்லை உன்னிடம்...

உன் பொய்கள் கூட எனக்கு பிடித்தம் தான்
சொல்வது நீயாய் இருப்பதால்..
என் கண்ணீர் கூட எனக்கு வரம் தான்
வரவழைப்பது நீயாய் இருப்பதால்..
சோகம் கூட எனக்கு சுகம் தான் 
கொடுத்தது நீயாய் இருப்பதால்..

என் உயிரானவனே...
நீ இல்லை என்றால் 
நான் இறந்து போவேன் என்றேல்லாம் சொல்ல மாட்டேனடா..
வரம் கொடு வாழ்ந்து பார்க்கிறேன்
" உன் உயிராக "
இல்லையேல் 
நினைவுகள் மட்டுமாவது கொடு
வாழ்ந்து காட்டுகிறேன்
" உன் காதலாக "

OCTOBER 31..
" கவிதை "
உன்னை எனக்கு 
அறிமுகம் செய்தத்து..
நீ எனக்கு
" காதலை " 
அறிமுகம் செய்தாய்..
எனக்காக இல்லை என்று தெரிந்திருந்தும்
பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறேன் 
உன் காதலோடு சேர்த்து
நீ அனுப்பிய அனைத்தையும்...
" நீயே கொடுத்ததால் "

என் அன்புக் காதலா...
புன்னகையின் பூந்தளிர் நீ
உன் செல்ல சிரிப்புகளோடும்
சின்ன சின்ன சில்மிஷங்களோடும்
சிதறடிக்கும் நினைவுகளோடும் தான் 
நிதமும் பயணிக்கின்றேன் நான்..

நான் சாய்ந்து கொண்ட உன் தோள்கள்
உன் இதழ் பதிந்த ஈரச் சுவடுகள்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைத்த தருணங்களுமாய் 
தொடர்கிறதடா எனது காலம்..
இங்கு நேரம் நிமிடம் எல்லாமும் போக்க வேண்டியவைகள் அல்ல...
" பொக்கிஷங்கள் "

நான் தேடித் தேடி சேகரித்து வைத்த என் நினைவுகளின் வழியில்
வார்த்தைகளின் வடிவினில் கண்ணாமூச்சி ஆடுகிறாய் நீ
என் எண்ணங்கள் அனைத்தையும் உன் நினைவுகளால் மட்டுமே நிரப்பி
என் வெள்ளைத் தாள்களை கவிதையாக 
மொழிபெயர்ந்தவன் நீ..
நான் கவிதையாக நினைத்து
எதையும் எழுதவில்லை..
உன்னைப் பற்றிய நினைவுகளை மட்டுமே
நிரப்புகிறேனடா..

NOVEMBER 17... 
தொடக்கத்தில் நீ யார் என்ற குழப்பம் மிகுந்திருந்தது எனக்குள்..
மெதுவாகத் தான் உணர்ந்தேன் 
நீதான் என் " காதல் தேவன் " என்று..
ஆண்களின் காதல் தேவதைகள் குறித்த சிரிப்பும் வரும் அப்போதெல்லாம்..
ஏன் காதல் என்றால் தேவதைகள் மட்டும் தான் இடம்பெறுவார்களா...???
அந்த தேவதைகளுக்கு எல்லாமும் தலைவன் நீ.. 
என் " காதல் தேவன்... "

எத்தனையோ யுகங்களாய் காத்திருந்து விட்டு
இந்த யுகத்தில் வந்து பிறந்த 
உன்னைப் பார்த்து தன்னை அழகாக்கி கொண்டதடா " காதல் "
உன் வசீகரத்தில் சற்று மயங்கித் தான் போனது என்னோடு சேர்த்து காதலும்..

உன் காதலை உணரத்தான் நான் தாமதம் செய்து விட்டதாக கூறுவாய்..
ஆனால் நீ என்னை விட்டு மெல்ல மெல்ல விலகுவதையும் நான் தாமதமாகத் தான் உணர்கிறேனடா...
உன்னை நினைத்து என்னை மறந்த அந்தாட்களில் வேதனைகள் மட்டுமே அறிமுகமானது எனக்குள்..
  ஆனாலும் தொலைந்து போனதடா என் இதயம் உனக்குள்..

நிதர்சனமான உண்மைகளை தாங்கியபடி
நினைவுகளோடு நிகழ்வுகளும் போட்டி போடுகிறது..
நிஜங்களை எரித்து உன் நினைவுகள் உருக்கப்படுக்கின்றன..
பொய்யாய் சிரிப்பதற்கும் கற்றுக்கொடுத்து விட்டாயடா இப்போது..!

NOVEMBER 29...
உன் அருகாமை தான் என் ஸ்வர்கம்..
இதை நீ உணர்ந்திருக்கிறாயோ என்னவோ..??
ஆனால் நான் உருகியிருக்கிறேன்..

காதலிலும் கண்ணீர் தந்தவன் நீ
கோபத்திலும் கண்ணீர் தந்தவன் நீ
இப்போது பிரிவிலும் கண்ணீர் தருபவன் நீ..

நீ..
என்னைத் தாங்கிய நாட்கள் 
கொஞ்சமானாலும் 
அதுவே என் வாழ்வின் பொற்காலம்
உன் மீதான அன்பினில் தினமும் கரைகிறதடா எனதுயிர்...
உயிர் பிழைத்திருந்தால் மீண்டும் சந்திக்கலாம்..

இனி ஒரு ஜென்மம் எடுப்பதானால்
எனக்கே எனக்கு மட்டுமாய் வேண்டுமடா 
உன் காதல் முழுவதும்... 
மற்றொரு பிறவியிலும்
உனக்காக நான் 
காத்திருக்கிறேன் ராஜகுமாரா..!!

( காதல் எப்போதும் அழகானது.. ஆழமானது.. ஆதலால்..
 முடிவுறாது நீளட்டும் அவளின் காதல் கனவுகளில் மட்டுமாவது அவனின் நினைவுகளோடு.. )

மென் தளிர் விட்டு 
அரும்பும் காதல்..!

விழி வரையும் கடிதங்கள்
மனத் தபால் பெட்டிக்குள் 
விழும் முன்னரே 
நிராகரிப்பு மட்டும் நிகழ்ந்து விடும்..

ஆனால் இங்கு முத்திரையிட்டு சரியாக விலாசம் பதிந்தும் ஏனோ நிகழ்ந்தது பிரிவுத்துயர்..
இதயத்திற்குள் வழியும் கண்ணீரை கண்களுக்கு அறிமுகம் செய்யாமல்
இன்னமும் காத்திருக்கிறது காதல் மட்டும் அன்போடு.. " மறுபிறவி " நோக்கி..!


நன்றி
நட்புடன் சௌம்யா... 

Tuesday, June 28, 2011

" யாரோ ஒருத்தியின் காதல் குறிப்பு... 1 "


அந்தி மழை காலத்தின் அழகிய பௌர்ணமி இரவினில்.. நிலை கொள்ளாமல் தடுமாறிய காற்றோடு... நில மகள் மீது தன் கால் தடம் பதித்து விளையாடிய மழைத் துளிகளை ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தேன் என் வீட்டின் வாசற்படியினில்.. தடம் மாறிய நிலையினில் என்அருகே வந்து விழுந்தது என்னை கடந்து சென்ற பேருந்தின் ஜன்னலின் வழியே ஒரு நாட் குறிப்பேடு.... அதன் பக்கங்களில் உயிர் கொண்டிருந்தது ஒரு அழகிய காதல்.. அந்நாட்குறிப்பேட்டினை படித்த போது தான் தெரிந்தது நான் நிற்பது கோடை மழை காலத்தில் அல்ல காதல் மழை காலத்தில் என்று..  அவளின் காதலோடு நான் பயணிக்கிறேன்....


JANUARY  9..


உயிர் நண்பனாக இருந்த நீ.. ஒரு நாள் " என் உயிர் காதல் நீதான்" 
என்று சொல்லி காத்திருந்த நிலையில் எதிர் பாராது நிராகரித்தேன் உனது அன்பினை....  
என்னால் மறக்க இயலாத உன்னையும், என்னின் நினைவுகளை தொலைக்க இயலாமல் எனது நாட்குறிப்பேடும் போட்டி போடுகின்றன காலத்தால்...

தேகம் தீண்டும் காற்றில் எல்லாம் உனது வாசம் நுகர ஆரம்பித்திருக்கிறேனடா...! 

கடவுளின் உருவம் கண்களில் அகப்படுவதில்லை...  மனதின் உணர்தலின் மூலம் தான் கடவுளை அறிய முடியும்.. அதுபோல காதல் என்பது மனித உணர்வுகளின் மெல்லிசை... அது உயிருக்குள் பூக்கும் வாசம்... மனதின் உணர்வுகளால் மட்டும் தான் காதலை உயிர்பிக்க முடியும்... 
நீ இல்லா இந் நாட்களில்... உணர்ந்து கொண்டேனடா நான்.. 


JANUARY 22..
என் ரகசிய ஸ்நேகிதா...

மௌனம் நிறைந்த என்னில் மெல்லிசை வருடல் நீ..
என் உலகை அழகாக்கும் மிக அழகானவன் நீ..
முதன்முதலாய் என் இதயம் நனைத்த அன்பானவன் நீ...!

எந்த நிமிடம் நீ என்னுள் விழுந்தாய்... 

எந்த தருணத்தில் என்னுள் விதையானாய் நீ...? 

புரியவில்லையடா இன்னமும்...

உன் முகம் காட்டி மனதோடு மட்டுமே பேசும் அந்த நிமிடத்திலா....?

புன்னகை தொலைத்த என்னில்..
தாய் தன் குழந்தைக்கு கதை சொல்லி உணவூட்டுவது போல, நீயும் பல கதைகள் சொல்லி என்னில் புன்னகை ஊட்டினாயே அந்த நிமிடத்திலா..?

பதில் கூறு என்று பல கேள்விகள் கேட்பாய்.. "தெரியலையே" என நான் சொன்னதும்... "நீயா யோசிக்கவே மாட்டியே" என்று சிரித்துவிட்டு பதில் கூறுவாயே அந்த நிமிடத்திலா..?

எப்போதும் புன்னகை தவழும்படி பூ முகம் காட்டுவாயே அந்த நிமிடத்திலா..?

ஓராயிரம் முறை உன் காதல் உரைத்து விட்டு.. ஒரு முறை நான் உரைப்பதற்காக காத்திருந்தாயே அந்த காத்திருப்பு நிமிடத்திலா..?

எப்படி உன்னால் நான் ஈர்க்கப்பட்டேன்...?
எந்த நிமிடத்தில் நிகழ்ந்தது இவை அனைத்தும்...? இன்னமும் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்னால்...!


JANUARY 31...
உன்னை மிகவும் பிடிக்கும் எனக்கு.... எவ்வளவு பிடிக்கும் என்று கேட்கிறாயே.. 'உலகில் மிகவும் அழகானது எதுவோ.. ஆழமானது எதுவோ.. அதைவிட ஆழமான அழகாக உன்னை பிடிக்கும் எனக்கு...

சங்கடங்கள் வரும் போதெல்லாம் மட்டும் தான் கடவுளை நினைக்கிறேன்... ஆனால் உன்னை மட்டும் தான் தடங்கலின்றி நொடிகள் தோறும் நினைக்கிறேன்... 

நீ விரும்பும் அனைத்தும் நானாகவே மாறினேனடா...
நீ வானவில்லை விரும்பினாய்.. நான் வண்ணமானேன்..
நீ மழையை விரும்பினாய்.. நான் தூறலானேன்..
நீ மரங்களை விரும்பினாய்.. நான் கிளைகளானேன்..
நீ காற்றை விரும்பினாய்.. நான் தென்றலானேன்..
நீ மலரை விரும்பினாய்.. நான் அதன் இதழ்களானேன்..
நீ பட்டாம்பூச்சியை விரும்பினாய்.. நான் அதன் சிறகுகளானேன்..
நீ புத்தகங்களை விரும்பினாய்.. நான் அதன் வரிகளானேன்..
நீ காலத்தை விரும்பினாய்.. நான் வசந்தமானேன்..
நீ வாழ்வை விரும்பினாய்.. நான் உன் காதலானேன்..
நீ உன்னையே விரும்பினாய்.. நான் உனக்குள் துடிக்கும் இதயமானேனடா


FEBRUARY 8...
நீ என்னோடு பேசிய பொழுதுகளை விட என் மனதோடு பேசி போராடிய பொழுதுகள் தான் அதிகமானது.... 
நீ எனக்கானவன் என்பதை நான் எதனால் முடிவு செய்தேன்.. 
நீதான் என் காதலானவன் என்பதை எப்போது முடிவு செய்தேன்..?
நான் கவிதைகள் எழுதிய போதா..?
உன் அழைப்புகளுக்காக காத்திருந்த போதா..?
உன் கவிதைவரிகளுக்கு நடுவே... இதை எப்படி எல்லாம் ரசித்து எழுதியிருப்பாய்..? என்று நினைத்து நானும் ரசித்துச் சிரித்தேனே... அப்போதா..?
உன் குறுஞ்செய்திகளை படித்துக் கொண்டே... உன் கவிதைகளோடும் உன் நினைவுகளோடும் உறங்கிப் போவேனே அப்போதா..?
எப்போது விதைத்தாய் என்னுள் ...??  வாழ்வினற்புதத்தை..!!

                                
FEBRUARY 20..
இன்று நேற்றல்ல... நான் புத்தகம் வாசிக்க தொடங்கிய நாட்களில் இருந்தே...அக்கதைகளில் ஒளிந்து வேடிக்கை காட்டி மறைந்து போகும் ஒரு முகம்... உன் புகைப் படம் பார்த்த பின் நான் வாசித்த முதல் புத்தகதில் உலா வந்தது உன் முகம்... மறைந்து போன வேடிக்கை முகம் கண்டுவிட்ட மகிழ்சியில் திளைப்பதா... இல்லை காலம் கடந்து கண்டுவிட்ட விரக்தியில் அழுவதா.. புரியவில்லை அப்போது...!                             
                                 
நான் சிரிக்க மறந்த நேரங்களில் .. சிதைந்து போன நிமிடங்களில்.. சத்தமின்றி அழுத இரவுகளில்.. மௌனமாய் இருந்த நொடிகளில் என அனைத்திலும் உடன் இருந்தது உன் புகைப்படமும் உன் வார்த்தைகளும் தான்...
                                                                
கடந்து விட்ட வருடங்களில் நீ இல்லை.. 
ஆனால் பின் வந்த ஆண்டுகளில் நீ மட்டும் தான் நிறைந்திருக்கிறாய்... 
கடந்து போன நாட்களின் நிகழ்வுகள் நிறைந்தே இருக்கிறது என் உள்ளத்தில்....


FEBRUARY 28...
உனக்கான உறவுகள் இல்லை என்றாய்.. 
உறவுகள் நிறைந்திருந்தும் இல்லாதவளாய் நின்றேன் நான்..!
நீ காதல் சொன்ன நாளில் இருந்தே.. கனவிலோ அல்லது காணும் பொருளிலோ எதிரில் வந்து நின்றுவிடுகிறாய் நீ.. 
இமைக்கவும் மறக்கிறேன் என் இதயம் பறித்த உன் புன்னகையால்...!

                               
MARCH 8...
என்னென்னவோ பேசினாய் நீ.. என் நியாயம் நான் கூற.. உன் வாதாடல்களும் கூட... சொல்லிவிட துடித்த மனதினை கட்டுப்படுதத்தான் பெரும்பாடாகிப் போனது எனக்கு... " மறு ஜென்மம் வரை காத்திருக்கிறேன்" என்ற உன் வார்த்தைகள் தான் இழுத்துச் சென்றது என்னை காதலில்...! 

என் லட்சியங்களும் ரகசியங்களும் கனவுகளோடு காலம் கழிக்க இயலாமல் துடைத்து எறியப்பட்டது " நீ மட்டும் தான் எனக்கு வேண்டும்" என்று நீ சொன்ன அப்போது...! சில நிஜங்களை சிலரால் மட்டும் தான் நிகழ்த்த முடியும்.. உன்னால் ஆன நிஜம் என் காதல்.. நிகழ்த்தியவன் நீ...! முதன்முதலாய் என் இதயம் நனைத்த அன்பானவன் நீ..!

MARCH 19...
குட்டிப்போட்ட பூனை மாதிரி என்னை சுற்றி சுற்றி வருகிறதடா உன் உன்னதமான நினைவுகள்.. ! 
நான் உதடு கடித்து அமர்ந்திருந்த நேரத்தில்.."யேய் அப்படி பண்ணாத டீ" என கூறி என்னை மேலும் வெட்கம் கொள்ளச் செய்த அந்த இனிமையான பொழுதுகள் நினைவிருக்கிறதா உனக்கு..?
                               
கைபேசி இணைப்பை துண்டிக்காமலேயே.. ஒற்றை முத்தத்திற்காக காத்திருந்துவிட்டு..  " என்ன டா " என கேட்குப் போது "சரி ஒன்னும் இல்லை" எனக் கூறி சிரித்துச் சிணுங்கிய நிமிடங்கள் நினைவிருக்கிறதா உனக்கு..?
                              
முத்தம் கேட்டு கெஞ்சிவிட்டு... பின் கேட்காமலே முத்தத்தால் கொஞ்சும் அந்த சில நிமிட நேரங்கள் நினைவிருக்கிறதா உனக்கு...?
                               
நீ என்னிடம் அளவளாவும் கதைகள் எனக்கு தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கும் என்னை கண்டுகொண்டு கேலி செய்வாயே.. அந்த சுகமான நாட்கள் நினைவிருக்கிறதா உனக்கு...?
                              
நான் பேச மறந்த தருணங்களில் " உன் வேலைகளுக்கு நடுவே என்னை மறந்து விடாதே" என குறுஞ்செய்தி அனுப்பினாயே.. அந்த நிமிடங்கள் நினைவிருக்கிறதா உனக்கு...?
                              
உன் மனதின் எண்ணங்களை வகைபடுத்தி குறுஞ்செய்தியாக அனுப்புவாயே.. நினைவிருக்கிறதா உனக்கு...?
                             
" உனக்குள் மறைத்துவைத்து இருக்கிறாய் காதலை... என்றேனும் வெளிப்படுத்துவாய்... இன்றில்லையானாலும் மறு ஜென்மத்திலாவது நடக்கும்.. நான் காத்திருக்கிறேன்" என கூறி காத்திருந்த நேரத்தில்... என் அழுகைக்கு இடையில் நான் காதல் சொன்ன நிமிடம்... அழகாய் சொன்னாயே " ஹப்பா.. இதுக்காக தான் காத்திருந்தேன்" என்று அந்த அழகிய நிமிடங்கள் தான் நினைவிருக்கிறதா உனக்கு..?
                              
உன் ஆசைகளை எல்லாம் என்னுள் விதைத்த நீ.. இன்று என்னை பார்பதும் அறிதாகி.. உரையாடல்களும் சுறுங்கிப்போனது.. நான் மட்டும் நிற்கிறேனடா சுமைதாங்கியாய்... ம்ம்ம்ஹூம்... காதலோடு... காதல் தாங்கியாய்...!


MARCH 27...
இப்போதெல்லாம என் கைபேசி மௌனமாகவே இருக்கிறது.....
மற்றவர் அழைப்பை கூட ஏற்க பிடிக்கவில்லை உன் அழைப்பு இல்லாத காரணத்தால்...
கவிதையாய் அனுப்பிய உன் காதலின் அடையாளங்கள் நிறைந்திருக்கும் உன் குறுஞ்செய்திகளை தூசு தட்டி பார்கிறது மனம்.. 
நிமிடங்களை கரைத்த நமது பதிலிருப்புகள் நிறைந்திருக்கிறது இன்பாக்ஸில் இன்னமும் அழிக்கப்படாமல் அழகாய்... 
கழிந்து போகும் நிமிடங்களையும் நேரங்களையும் கணக்கறியாது நகர்த்திச் சென்ற நமது உரையாடல்கள் நிறைவாய் நிற்கிறது அழிக்கப்படாத அழைப்புகளில்.. 
" என்ன பன்னிட்டு இருக்க... அப்புறம் ... ம்ம்... ம்ஹும்... " இப்படி எத்தனையோ அர்த்தமற்ற உரையாடல்கள் .. குரல் கேட்பதற்காகவே அழைத்தோம் உன்னை நானும் என்னை நீயும்....
சில நேர அழைப்பின் போது காத்திருப்பு ஒலி கூறும் " மற்றொரு நபருடன் தொடர்பிலிருக்கிறார்" என்று... உடனே தொடங்கிவிடும் சின்ன சண்டையும் செல்ல சிணுங்களும்...
இப்போதெல்லாம் ரொம்பவே அமைதியாகி விட்டது என் கைபேசி... உன் அழைப்பில்லாத காரணத்தினால்...

சலித்துவிட்டதோ அன்றி தவிர்த்து விட்டாயோ... காரணமின்றி கேள்விக்குறியாகிவிட்டது குறைவாகிப் போன உன் அழைப்புகள்... நான் ரசித்த உன் வார்த்தைகளை கூட உனக்குள் பூட்டி வைத்துக்கொண்டு விட்டாய் மௌனமாக...
நீ கொஞ்சிப் பேசிய எனது கைபேசியும் இன்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டதடா.. உன் அழைப்பிற்காக... 

நீ செல்லமாக கொஞ்ச வேண்டாம், சிறிதளவேனும் மௌனம் தவறவிடு போதும்...
உன் காதல் பார்வை வேண்டாம், ஓர விழி பார்வை மட்டுமாவது கொடு போதும்...
பார்த்துப் பார்த்துப் பழக வேண்டாம், பிறை முகமாவது காட்டு போதும்..
வார்தைப் பரிமாறல்கள் வேண்டாம், எழுத்துப் பரிமாறல் மட்டுமாவது கொடு போதும்..
மணிக்கனக்காய் பேச வேண்டாம், நாளில் நான்கு முறையாவது பேசு போதும்...!
துயரத்துடனே மௌனமாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்னைப் போலவே உன் அழைப்பில்லா என் கைபேசியும்...!


APRIL 16..
விவாதத்தில் தொடங்கி, நிராகரிப்பில் ஆரம்பித்து , அழுகையின் இடையில் ஜெயித்தது உன் காதல்.... அன்று முதலே எதிர்பார்க்கத்துவங்கிவிட்டது எனது வாழ்வின் பக்கங்கள் உனது வரிகளை..
                           
என் பிரியமானவனே.. 
உன் காதல் சொல்லி வாதிட்ட நேரங்களில் எல்லாம் வார்த்தைகளால் வலி குடுத்து நிராகரித்தேன் உன்னை... ஆனால் என் மனதோடு தான் போராட இயலவில்லை.. உனதன்பின் ஆழமும்.. காதலின் வேகமும் தான் தூண்டியது என்னை.." நானும் உன்னை காதலிக்கிறேன்" என்று சொல்லச் சொல்லி...
                            
என் செல்ல ஸ்நேகிதா... 
நான் உன் மடி வரும் வரை காத்திருந்த நீ... இப்போது வேலையின் காரணம் சொல்லி என்னை காக்க வைப்பது ஏனடா...? 

என்னுள் விதைத்திருக்கிறேன் சில கனவுகளை...  
" உன் தோள் சாய்ந்து படுக்கும் நேரம் அதிகமாக வேண்டும்..
அப்போதெல்லாம் என் தலை கோதும் உன் விரல் வேண்டும்... 
நான் இளைப்பாறுவதற்கு வேண்டும் உன் இதழ் முத்தம்...
உன் வேலை நேரத்திலுன் எனை அழைத்து இரு வார்த்தை ஒரு முத்தம் பேசிட வேண்டும்...
விரும்பும் நேரத்தில் இல்லாவிட்டாலும் என் விழி தேடும் நேரத்திலாவது உன் முகம் காண வேண்டும் நான்...  
என் உணர்வில் கலந்துவிட்ட நீ உயிராய் வேண்டும் எனக்கு...
மரணம் என்னை மொத்தமாய் விழுங்கும் வரையிலும் உன் நேசமும் காதலும் எனக்கே எனக்காய் வேண்டும்...
உன் குரல் கேட்டு என் பொழுது விடிய வேண்டும்...
உன் மடியில் என் இரவு முடிய வேண்டும்... 
இது இயலாவிடினும் குறைந்த பட்சமாக என் கடைசி நிமிடங்கள் மட்டுமாவது உன் மடியில் தீர்க்க வேண்டுமடா...!


APRIL 28..
தனிமையில் தவிக்கும் நாட்களிலும்.. உனதருகே இருக்கும் நிமிடங்களிலும்.. உனக்கே உனக்காக மட்டும் தான் எனதுயிர் எனும் எண்ணம் உண்மை தான் என்பதை உணர்கிறேனடா நான்...
                        
என் உள்ளம் கவர் கள்வனே... 
உன்னோடான எதிர்பார்ப்புகள் ஏமாற்றமே தருகிறது பல சமயம்... 
என் வாழ்வை நகர்த்திச் செல்வது உன்னோடான காதல் மட்டுமே. என்னை அன்பால் வென்றவனடா நீ... 
என் வாழ்வை வளமாக்கினாய் உன் வார்த்தைகளால்... 
என் உயிர் பறித்தாய் உன் புன்னகையால்..
உன் பாசாங்கில்லா அன்பை என் இதயம் பருகச் செய்தாய்.. 
என் சோகங்கள் அனைத்தையும் என் மனதோடு அமர்ந்து களைத்தெரிந்தவன் நீ....
                            உன்னை மொத்தமும் நேசிக்கிறேன்...
                            உனது மூச்சையே ஸ்வாசிக்கிறேன்...
                            பல யுகங்களாய் எனதிதயம் தேடிய என் உயிர் நீ...
                            நின்னைச் சரணடைந்தேனடா....! 
                          
( தொடர்ந்து வந்த நாட்குறிப்பின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்ட நிலையில் அவளின் தீரா காதலின் நினைவுகளை சுமக்க இயலாமல் காகிதங்கள் தற்கொலை செய்து கொண்டன போலும் .. ) 


தொடரும்.... 

Sunday, June 12, 2011

" நான்... நீ... ஆதலால்... காதல் "


எத்தனை முறை 
அனைத்தாலும் 
புதிதாகத்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறையும் 
உனதனைப்பு...






நீ முத்தமிடும்
நளினம் கண்டே
விலகிப் போனதடா
என் வெட்கம்...

என்னை 
கொல்வதற்கென்றே
ஒரு பார்வையும்..
என்னை 
கொள்ளையடிப்பதற்கென்றே
ஒரு சிரிப்பையும்
வைத்திருக்கிறாய் நீ...



நீ 
அருகில் உறங்கும்
நேரங்களில் எல்லாம்
என் உறக்கம் தொலைத்தே
விழித்திருக்கிறேன் 
உன் உறக்கம் ரசிக்க...
எங்கேதான் 
கற்றுக்கொண்டாயோ..?
அழகாய் உறங்குவதற்கு..!!


உன் தலை கோதும் போது
என் கைவிரல் இடுக்கில்
அகப்பட்ட ஒற்றை முடியை..
நீ அறியாமல் 
பதுக்கிக் கொண்டது 
என் புத்தம் புது டைரி..!

நீ கடித்தெறிந்த
உன் கைவிரல் 
நகத்துண்டுகள்
பிறை நிலவினை விட
அழகானது...

என்
பார்வை தொடரும் 
இடமெல்லாம் 
நின்று
கள்ளமாய் சிரித்து 
என் உள்ளம் 
தொடுகிறாயடா
என் கள்ளச்சிரிப்பழகா...!



என்னுள் 
தட்பவெப்ப மாற்றம் 
நிகழ்த்துகிறாய் நீ..
உச்சி வெய்யிலிலும்
என் உள்ளம் 
குளிர்விக்கிறது
உன் அருகாமை..
என் செல்ல ஸ்நேகிதா
அறியாமல் தான் 
கேட்கிறேன்
என்ன மந்திரம் 
செய்கிறாயடா நீ...???

என் செல்லக் குறும்புக்காரா..
உன்னை நினைத்தே 
வைத்துக்கொண்டதாலோ 
என்னவோ
என் கைவிரல்களில் 
அழகாய் சிவந்திருக்கிறது
மருதாணி...

நமக்குள் 
பேசிக்கொண்டு 
இருக்கையில்
திடீரென 
முத்தமிட்டுவிட்டு
ஏதுமறியாது
சிரித்துப் 
பேசிவிடுகிறாய் நீ..
அதில் 
சிக்கலாவதென்னவோ
என் மனம் தான்..


"இங்கே வா.. 
என்னை ஒரு 
புகைப்படம் எடு"
என்கிறாய்..
அது என்ன ..
என் விழிகளை விட
அவ்வளவு அழகாக 
படம் பிடித்து 
விடுமா உன்னை..?


உன் காதல் பெரிதா..?
என் காதல் பெரிதா..?
என கேட்டாய்..
இறுமாப்புடன்
சொல்லத் தொடங்கினேன் 
கவிதையில்
காதலை..!




இப்போது 
நீ சொல் என்றேன்...
புன்னகைத்துவிட்டு
முத்தங்களால் 
சொல்லத் தொடங்கினாய் நீ..
தோல்வியோடு 
தலை குனிந்ததடா 
என் கவிதைகள்..